யு.எஸ்.தமிழன்

தமிழனின் பார்வையில் அமெரிக்கா

பெப்ரவரி 17th, 2007- ‍க்கானத் தொகுப்பு

ஈராக் படைபல அதிகரிப்புக் கோரிக்கை நிராகரிப்பு

பதிந்தவர் usthamizhan மேல் பெப்ரவரி 17, 2007

ஈராக்கிற்கு மேலும் படைகளை அனுப்ப வேண்டி புஷ் வைத்த கோரிக்கையை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிராகரித்துவிட்டது.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளில் பெரும்பான்மை பலத்தை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் குடியரசு கட்சி சில முக்கிய மாகாணங்களில் பதவி இழந்ததால், இரு சபைகளின் பெரும்பான்மை பலம் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியின் கைக்கு மாறியது. இவ்வாறு மாறியபோதே குடியரசு கட்சியோ, புஷ்ஷோ தீட்டும் ஒவ்வொரு திட்டமும் பெருத்த மோதலுக்கு பிறகே நிராகரிக்கவோ ஏற்கவோ படும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த வருடங்களில் புஷ் படைபல அதிகரிப்போ, போருக்கான நிதியோ கோரும் போது எந்த தடங்கலும் இல்லாமல் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் பெரும்பான்மை இழந்தபிறகு புஷ்ஷிற்கோ அவரது கட்சியினருக்கோ இந்த நிராகரிப்பு எந்த வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்க போவதில்லை.

திட்டமிட்டு காய்களை நகர்த்துவதில் குடியரசு கட்சிக்கோ, புஷ்ஷிற்கோ நிகர் யாருமில்லை. டெக்ஸாஸ் மாநில கவர்னராக போட்டியிட்ட போதே புஷ் தனது எதிராளிகளை பயன்படுத்தி எந்த பெரிய மக்கள் நல கொள்கைகளையும் முன்நிறுத்தாமல் வென்றவர். அதனால் இந்த நிராகரிப்பை எதிர்நோக்கியே அவர்கள் காய் நகர்த்துவார்கள். ஒரு வகையில் இவை அனைத்துமே குடியரசு கட்சியின் திட்டமோ என்றே எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

படைபல அதிகரிப்பை இந்த முறை வேண்டியது ஜான் மெக்கெய்ன். அவர் ஈராக்கிற்கு சென்று அங்குள்ள நிலமையை படை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே இந்த அதிகரிப்பு ஆலோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த ஆலோசனையை புஷ்ஷிற்கு முன்மொழிந்தது கன்சர்வேடிவ் குடியரசு கட்சி அமைப்பாளர்களின் அபிமானத்தை பெறுவதற்கே என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர்களின் ஆதரவின்றி மெக்கெய்ன் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது கடினம். மெக்கெய்னை “Democrats favorite Republican” என்று கிண்டலும் அடித்ததுண்டு. இந்த வார்ப்புகளில் இருந்து பிரித்து தன்னை குடியரசு கட்சியின் அபிமானியாக நிலைநிறுத்திக்கொள்ளவே மெக்கெய்ன் படைபல அதிகரிப்பை கோரியிருக்க முடியும். அதை சரியான நேரத்தில் உபயோகித்துக் கொண்டதே புஷ்ஷின் சாமர்த்தியம்.

McCain Pact

அடுத்து, போருக்காக புஷ் கோரியிருந்த 93 பில்லியன் டாலருக்கான மனுவும் நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. போரில் வெற்றிபெரும் வாய்ப்போ அல்லது படைகளை திரும்பப்பெருவதற்கான சாத்தியங்களோ மிகவும் குறைவு என்பது புஷ்ஷின் சகாக்கள் அறியாதது அல்ல. அதை அறிந்தே இந்த திட்டங்கள் யாவும் தீட்டப்பட்டிருக்கலாம். போரில் தோல்வி அடைந்ததும், அதற்கான காரணமாக ஜனநாயகக் கட்சியின் இந்த முடிவுகளை எடுத்துக் காட்டமுடியும். ஜனநாயகக் கட்சி, படைபல அதிகரிப்பையும் போர் நிதிக்கான கோரிக்கைகளையும் நிராகரித்த காரணத்தினால்தான் போரில் தோல்வியும் படைச் சேதமும் ஏற்பட்டது என குடியரசு கட்சி குற்றம்சாட்ட இதை தக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளும். அதை அமெரிக்க மக்கள் நம்பி மெக்கெய்னை அடுத்த அதிபராக தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அமெரிக்கர்களைப் பொறுத்தமட்டில் கறுப்பு இன ஒபாமாவையும், பெண்னான் ஹிலாரியையும் விட, ‘The Man in the Middle’ ஜான் மெக்கெய்னை அதிபராக தேர்ந்தெடுக்க முன்வரலாம்!

.... இங்கே பதியப்பட்டது அரசியல் | Leave a Comment »